பெண்களுக்கு எதிராக சமூக, பொருளாதார, பாலியல் ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல, பண்பாட்டு ரீதியான ஒடுக்குமுறைகளும் ஏவி விடப்படு கின்றன. இன்னும் சொல்லப்போனால் பல்வேறு வகையிலான ஒடுக்குமுறைகளுக்கு ஒப்புதலை ஏற்படுத்து வதாக பண்பாட்டுத் தளம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்க அவருடைய ஜாதகத்தை நீதிமன்றம் கேட்டது இதற்கு சமீபத்திய உதாரணமாகும். உ.பி.யில் ஒரு ஆசாமி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஒரு பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த நிலையில், அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகி யுள்ளார். அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அந்த ஆசாமி கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இவரை தண்டிப்பதற்கு பதிலாக அவர் கூறியபடி, அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை லக்னோ பல்கலைக்கழக ஜோதிட வியல் துறைத் தலைவருக்கு அனுப்பி ஆய்வு செய்யு மாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத் தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பெண்ணின் திருமண வயதாக 18 தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரண்டு வயது குழந்தைக்கு கூட திருமணம் செய்துவைத்த கொடுமை நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டது.
ஆனால் இன்னமும் சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர், தங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடுமை நடந்து கொண்டி ருக்கிறது. இது தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கொடிய பழக்கத்தை கண்டிப்பதற்கு பதிலாக குழந்தைத் திருமணம் செய்தவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, பீகாரிலிருந்து வந்திருந்த மாணவர்களி டம் தமக்கே குழந்தைத் திருமணம் நடைபெற்றது என்றும், நானும் என்னுடைய மனைவியும் மகிழ்ச்சியாக இல்லறத்தை நடத்தினோம் என்றும், என்னுடைய புகழுக்கு என்னுடைய மனைவி காரணம் என்றும் குழந்தைத் திருமணத்தை நியாயப்படுத்துகிறார்.
குழந்தைத் திரு மணம் செய்து கொண்டதால் தாம் ஒன்றும் குறைந்து போகவில்லை என்பதே அவரது வாதமாக உள்ளது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் மருத்துவம் படித்தவர். பாஜகவில் சேர்ந்துவிட்டதால் மருத்துவ அறிவியலை முன்வைப்பதற்குப் பதிலாக, அறிவியலுக்குப் புறம்பான விசயங்களை முன்வைக் கிறார்.
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ராமா யணத்தின் சுந்தரகாண்டத்தை படித்தால், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நல்லது; சுகப்பிரசவமும் நடக்கும் என்று அடித்துவிடுகிறார். சுந்தரகாண்டம் படிக்கச் சொல்வது அவருடைய உரிமை. ஆனால், பெண் களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மருத்துவ அறிவியலை புறக்கணித்து, நிரூபிக்கப் படாத விசயங்களை அறிவுரையாக கூறுவது ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவருக்கு அழகல்ல.
காலம் காலமாக பழமொழிகள் வழியாகவும், புனைந்துரைக்கப்பட்ட கதைகள் வழியாகவும் பெண்களுக்கு எதிராக அநீதிகள் நிலைநிறுத்தப்படு கின்றன. ‘உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு’ என்கிறது அவ்வையின் ஆத்திச்சூடி. இதை மறுத்து, பாரதி தனது ஆத்திச்சூடியில், ‘ஊண் மிக விரும்பு’ என்கிறார்.
பெண்கள் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்கிற பழமொழியின் மூலம் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் இருக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக பசியுடையவர்களாக இருப்பார் கள். ஆண்களைவிட அவர்களுக்கு இரண்டு மடங்கு பசி இருக்கும் என்று கூறுகிறது அர்த்த சாஸ்திரம். இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. இவ்வாறு உளறி வைத்துள்ள சாணக்கி யரைத்தான் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் பெரிய சிலையாக செய்து வைத்துள்ளது நரேந்திர மோடி அரசு.
சாணக்கியர் அத்துடன் நிற்கவில்லை. ஆண்களை விட பெண்களுக்கு பாலுணர்வு அதிகம் என்றும் சொல்லி வைத்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க முன்வராத மோடி அரசு, இந்த சாணக்கியருக்கு நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் சிலை வைக்கிறது.
கணவன் இறந்தவுடன் பெண்களை உடன்கட்டை ஏற்றும் கொடிய பழக்கம் பெரும் போராட்டத்திற்கு பிறகு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளு மன்றத்திலேயே பாஜகவைச் சேர்ந்த சத்யபிரகாஷ் ஜோஷி என்பவர், உடன்கட்டை ஏறிய ராணி பத்மா வதியை புகழ்ந்து பேசினார். தன்னுடைய அரச பரம்பரையின் பெருமையையும், தன்னுடைய கவுரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள உடன்கட்டை ஏறிய பத்மாவதியை வணங்குவதாக அவர் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தியாவில் மீண்டும் மனுதர்ம ஆட்சியை கொண்டுவர சனாதனவாதிகள் சதி செய்கிறார்கள். மனுஸ்மிருதி என்பது உழைக்கும் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, பெண்களுக்கு முற்றிலும் எதிரானது. பெண்களை வழக்கில் சாட்சியாகக் கூட ஏற்கக் கூடாது என்கிறது மனுஸ்மிருதி.
சனாதனவாதிகள் தூக்கிப்பிடிக்கும் அந்தப் புத்தகத்தில், பிற்போக்குத்தனமான புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன.
பெண்கள் சிறுவயதில் தங்கள் தந்தையின் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப் பிறகு கணவரின் பாதுகாப்பிலும், முதுமையில் தன்னுடைய மகன்களின் பாதுகாப்பிலும்தான் இருக்க வேண்டும்.
அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியாக வாழக்கூடாது. (மனு 5/151). ஒரு கணவன் எந்தவொரு சிறப்பும் இல்லாத வனாக இருந்தாலும், மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், கெட்டவனாக இருந்தாலும், நீதியற்றவனாக இருந்தாலும், அவனை வணங்கி சேவகம் செய்வதே மனைவியின் கடமை (மனு 5/157).
பெண்கள் பூஜை செய்வதோ, விரதம் இருப்பதோ சாஸ்திரத்தின்படி தடை செய்யப்பட்டது. கணவனின் சொல்படி நடந்து அவனை சந்தோஷப்படுத்தினால் மட்டுமே பெண்கள் சொர்க்கம் செல்ல முடியும் (மனு 5/158).
கணவன் இறந்தபின் ஒரு பெண் எந்தவொரு ஆணிண் பெயரைக்கூட சொல்லக் கூடாது (மனு 5/160). கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் ஒரு பெண் கேவலப்படுவாள், தொழுநோயாளி ஆவாள், இறந்தபின் குள்ளநரியின் கருப்பையை அடைவாள்
சனாதனிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண் டாடுகிற மனு அநீதியின் ஒரு சில வரிகள்தான் இவை. இத்தகைய ஒரு புத்தகத்தை புனிதப் படுத்துபவர்கள் பெண்கள் குறித்த மிக மோசமான, அருவருக்கத்தக்க பார்வையுடையவர்களாகவே இருப்பர்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமுடைய வர்கள் அல்ல என்று காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்த ஜெயேந்திரர் கூறினார். தற்போது, எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பெரும்பாலும் குடும்பரீதியான குற்றங்க ளுக்கு பெண்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்றும், பெண்கள் தங்களுக்கு 2000 ஆண்டுகளாக இருந்து வரும் சட்ட சமூக பாதுகாப்பை பயன்படுத்தி சுரண்டலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக் கொண்டார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்பொடிகளில் ஒருவர்.
இத்தகைய குரல்கள் அனைத்தும் மனுவின் எதிரொலிகளே ஆகும்.
மதவெறிக்கு எதிரான போராட்டம் என்பது பெண்ணுரிமையை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.
மதவெறி மாய்ப்போம்! சம உரிமை போற்றுவோம்!